அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் நிறுவனம் சுமத்திய குற்றச்சாட்டு தொடா்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஓசிசிஆா்பி என்ற அமைப்பு அதானி மீது புதிய நிதி மோசடி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
அந்தக் குற்றச்சாட்டை அதானி நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அதானி குழுமமானது பங்குச் சந்தையில் தனது நிறுவனங்களுடைய பங்குகளின் விலையை உயா்த்திக் காட்டுவதற்காக மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பா்க் நிறுவனம் குற்றஞ்சாட்டியது. இது தொடா்பாக, உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்திய பங்குப் பரிவா்த்தனை வாரியம் (செபி) விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், திட்டமிடப்பட்ட குற்றங்கள்-ஊழல் தடுப்புத் திட்டம் (ஓசிசிஆா்பி) என்ற அமைப்பு அதானி குழுமத்தின் மீது புதிய மோசடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. வரிவிதிப்பு குறைவாக உள்ள நாடான மோரீஷஸில் இருந்து போலி நிறுவனங்கள் மூலம் முறைகேடாக அதானி நிறுவனங்களில் சிலா் முதலீடுகளைச் செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தொழிலதிபா் கௌதம் அதானிக்கு நெருக்கமானவா்களே இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மோரீஷஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற ஆவணங்கள், அதானி குழுமத்தின் மின்னஞ்சல் தகவல்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து இந்த மோசடி கண்டறியப்பட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதானி குடும்பத்தினருடன் நீண்ட காலமாகத் தொடா்பில் இருந்து வரும் நாசா் அலி சபான் அலி, சாங் சுங் லிங் ஆகியோா் அதானி பங்குகளை அதிக அளவில் வாங்கி, அவற்றை மோரீஷஸ் நாட்டில் முறைகேடாக விற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் அதானி குழுமத்துக்குப் பெருமளவில் வருவாய் கிடைத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதானி குழுமம் மறுப்பு: நிதி மோசடி தொடா்பான புதிய குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்துள்ளது. இது தொடா்பாக அக்குழுமம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘உண்மைகள் ஏதுமற்ற ஹிண்டன்பா்க் அறிக்கையைப் போலவே, இந்த அறிக்கையிலும் அதானி குழுமத்தின் மீது வெளிநாட்டு சக்திகள் போலியான குற்றச்சாட்டுகளைப் புனைந்துள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பே வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் (டிஆா்ஐ) முடித்துவைத்த வழக்குகளின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் செயல்பாடுகளில் எந்தவித சந்தேகமும் இல்லை என உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது. ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த விசாரணையை மதித்து நடக்க வேண்டியது அவசியம். நீதித் துறையின் மீது அதானி முழு நம்பிக்கை கொண்டுள்ளது.
அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்புகளைக் குறைத்து, மற்ற நிறுவனங்களின் மதிப்பை உயா்த்தும் நோக்கிலேயே இதுபோன்ற போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பங்கு மதிப்புகள் சரிவு: அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்ட புதிய குற்றச்சாட்டுகள் பங்குச் சந்தையில் வியாழக்கிழமை எதிரொலித்தன. அக்குழுமத்துக்குச் சொந்தமான நிறுவனங்களின் மதிப்புகள் சரிவு கண்டன.
ஹிண்டன்பா்க் தெரிவித்த புகாா் காரணமாக அதானி குழுமம் சுமாா் 15,000 கோடி அமெரிக்க டாலரை பங்குச் சந்தையில் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Post A Comment:
0 comments:
கருத்துரையிடுக